Thursday, April 30, 2009

மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதி - 1



உத்யத் பானு ஸஹஸ்ர கோடி சத்ருஷாம் - கேயுர ஹாரோஜ்வலாம்
பிம்போஷடீம் ஸ்மிததந்த பந்க்திருசிராம் பீதம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம ஸுரேந்திர சேவித பதாம் - தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் !!

தாயாருடைய தேஜஸை பற்றி ஸம்ஸ்க்ரித பாஷையில் ஆதி ஷங்கர பகவத் பாதாள் அருளும் முதல் சொற்பதம் -- உத்யத் பானு -- அதாவது உதிக்கின்ற சூரியன்.

திருக்கடையூர் அபிராம பட்டர் அபிராமி அந்தாதியில் தாயரை போற்றி தொடங்கும் முதல் தமிழ் வார்த்தை -- உதிக்கின்ற செங்கதிர். தாயாரின் பூரண கடாக்ஷத்தை பெற்ற அடியோர்கள் மனதில் அவள் ஒரே ரூபசௌந்தர்யத்தில் காட்சி அளிப்பதை அதிசயம் என்பதை தவிர வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும்? பட்டர் பிரான் சொல்வது போல சந்தேகமே இல்லாமல் அவள் "அதிசயமான வடிவுடையவள் " தான் !!

உத்யத் பானு ஸஹஸ்ர கோடி சத்ருஷாம்
ஆயிரம் கோடி உதிக்கின்ற சூரியனை போன்ற பிரகாசத்தை உடையவள்

கேயுர ஹாரோஜ்வலாம்
கேயுர ஹாரம் - மேல் கையில், அதாவது தோளுக்கு பக்கத்தில் அணியும் அணிகலன். கேயுரஹாரத்தை அணிந்து அலங்கரிப்பவள்.

பிம்போஷடீம் - பிம்பா பழம் - தமிழில் - கொவ்வை பழம் - போன்ற சிவந்த உதடுகள்
ஸ்மிததந்த பந்க்திருசிராம் - வெள்ளை புன்முறுவல் ( ஸ்மித - புன்சிரிப்பு ) கொண்டவள் .
பீதம்பராலங்க்ருதாம் - தங்க பட்டாடை அணிந்து அலங்கரிப்பவள்.

விஷ்ணு ப்ரஹ்ம ஸுரேந்திர சேவித பதாம் - தத்வ ஸ்வரூபாம் சிவாம் --
விஷ்ணு , ப்ரஹ்மா , இந்திரன் போன்ற தேவாதி தேவர்களும் கடவுள்களும் போற்றும் தத்வ - ஸ்வரூபம் ஆனவள் - சிவனின் பாதியனவள்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம்நிதிம் --சமுத்திரத்தை போன்ற அளவிலா கருணையும் மங்களமும் கொண்ட அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியை நமஸ்கரிக்கிறேன்

இந்த பதிவை எழுதிய பின் இன்றைய தினம் ஷங்கர ஜெயந்தி என்பதை அறிந்து மனம் உவகை கொள்கிறது. வெகு சீக்கிரம் தாயாரை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்து விடை பெறுகிறேன். மேற்கண்ட பதிவில் என் அறிவிற்கு எட்டியதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருளி, பின்னூட்டங்களில் தெரியப்படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்.


மாத்ரு தேவோ பவ , பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ.

Monday, April 20, 2009

தாயார் திருவடி சரணம்

இனி என்னை புதிய உயிராக்கி - மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்!

சில நாட்களுக்கு முன்பு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக இனிதே நடைபெற்றது. இது வரை அந்த காட்சியே காண சித்தம் பிறக்கவில்லை. மதுரையில் பிறந்திருந்தாலும் தாயாரை போற்றி எந்த ஒரு ஸ்லோகமும் இதுவரை எனக்கு தெரியாமல் இருப்பதை சரி செய்ய எனக்கு இப்பொழுது ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்து உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் அனுக்ரகம் செய்த ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்துதியை கற்று கொள்ள வேண்டும் என்ற எனது நீண்ட ஆவலை பதிவு செய்ய மனம் விழைகிறது. மதுரை கல்லூரி மேல் நிலை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பயின்ற காலங்களில் காலை இறை வணக்கம் நரசிம்ஹன் என்ற எனது நண்பனால் பள்ளிகூட விளையாட்டு மைதானத்தில் உரக்க சொல்லப்படும். முதல் வணக்கம் ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்ன ஸ்துதியின் " உத்யத்பானு என்று ஆரம்பிக்கும் சுலோகம், பிறகு தமிழ் தாய் வாழ்த்து அதை தொடர்ந்து தேசிய கீதம். இன்றளவும் எனக்கு அந்த முதல் ஸ்லோகத்தை தவிர்த்து பிற ஸ்லோகங்கள் தெரியாது. வருகின்ற நாட்களில் ராமாயணத்து அணிலை போன்று என் சிற்றறிவிற்கு எட்டும் அளவிற்கு தாயாரின் ஸ்லோகங்களை கற்று, அதன் பத பொருளை இங்கு எழுத முயற்சி செய்கிறேன். ஆதி குரு அனுக்ரகம் செய்த இந்த மந்திரத்தின் அற பொருளை அடியேனுக்கு உணர்த்திட அந்த ஜகன் மாதாவை பிரார்த்திக்கிறேன்.மேலும் மதுரை கோவிலின் பெருமைகளை பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளையும் இங்கே தொகுத்து வழங்கவிருக்கிறேன்.

http://frontlineonnet.com/fl2608/stories/20090424260812300.htm

மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ, ஆச்சர்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ.